இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று கிளிநொச்சியில் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேர்தல் திணைக்களத்தில் தனிக் கட்சியாக பதிவு செய்வது, மீளகுடியேற்றப் பிரதேசங்களில் பலவந்தமாக மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்ற சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியின் இந்த உயர்மட்டக் கூட்டம் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.
கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணிவரையில் கூட்டம் நடைபெற்றிருக்கின்றது.
வடக்கு கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.
இங்கு முக்கியமாக, பொதுமக்களின் காணிகளை இராணுவ தேவைக்காகக் அரசாங்கம் கையகப்படுத்துவது, இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வது, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள குடும்பங்கள் தாயகம் திரும்பி மீள்குடியேறுவது தொடர்பில் இலங்கை இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுக்கள் நடத்துவது, இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்த நடவடிக்கைகள், அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் தீர்வு யோசனைகள் போன்றவை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இங்கு பேசப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து அதுபற்றி அறிவிக்கும்போது, தாங்களும் அதுபற்றி முடிவெடுப்பது என்றும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர் சிற்றம்பலத்திற்கும் இடையில் பலத்த வாக்குவாதம் நடந்ததாக தெரிவிக்கப்படுவது குறித்து கேட்டபோது, அத்தகைய வாக்குவாதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று மாவை சோனாதிராஜா தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் பல விடயங்கள் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும், அவற்றுக்கு தாங்கள் உரிய விளக்கம் அளித்ததாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இலங்கையில் இருந்த எமது செய்தியாளர் வாசு-