தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் நிதி வழங்கும் முகமாகவும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்கிலும் பல ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அத்தனகல்ல- மினுவங்கொட மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல், கண்டியில் சர்வதேச மநாட்டு மண்டபமும் அநுராதபுரத்தில் கலையரங்கும் அமைத்தல்.
கொழும்பு -ராகமை வைத்தியசாலைகளில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளல், யாழ்ப்பாணம்- கொழும்பு அதிவேக பாதை தவிர மேலும் வடமாகாணத்தில் புகையிரத பாதை நீடிப்புகளுக்கும் நிதி உதவி வழங்குதல். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரையில் விஸ்தரித்தல்.
கொழும்பு – கண்டி- குருணாகல் மாவட்டங்களுக்கு இடையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை நிர்மாணித்தல் போன்றன ஒப்பந்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அபிவிருத்தித் திட்டங்களாகும்.
அமைச்சரகளான போரசிரியர் ஜீ.எல் பீரிஸ், விமல் வீரவன்ச, டக்ளஸ் தேவானந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். அஸ்வர், நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, நிதியமைச்சின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர மற்றும் சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் ரஞ்சித உயன்கொட ஆகியோரும் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் வைபவத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-