சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுக்கக் கூடாது என தமிழக மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனு ஆராயப்பட்ட சந்தர்ப்பத்தில், நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவுபடுத்திய தமிழக அரசின் பிரதிநிதிகள் அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கோரியுள்ளனர்.
பொருளாதார ரீதியில் நன்மைகள் காணப்பட்ட போதிலும், சேது சமுத்திர திட்டம் மூலம் மக்களுக்கு எவ்வித நலன்களும் ஏற்படப்போவதில்லை என தமிழக அரசின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் பாரிய சூழல் மற்றும் கலாசார பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என்றும் இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட பச்சாவுரி குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடல் வலயத்தில் மீன் வளம் பெருகிக் காணப்படுவதுடன் சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் மீன் வளம் அழிவடையும் எனவும் தமிழக மாநில அரசின் பிரதிநிதிகள் நிதிமன்றத்தில் மேலும் தெளிவுபடுத்தியுள்ளனர்.
-GTN