இறந்து போன பெண்ணின் ஃபேஸ்புக் பக்கத்தை நீக்க கோர்ட் உத்தரவு: ஒரு தாயின் கண்ணீர் போராட்டம் வெற்றி

facebook-womenகாம்போ கிராண்ட்: அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையினால் இறக்க நேரிட்ட, 24 வயதுப் பெண் ஒருவரின் சுய விபரமிட்ட பக்கத்தை பேஸ்புக்கிலிருந்து உடனடியாக நீக்குமாறு அப்பெண்ணின் தாய் தொடர்ந்த வழக்கில், சாதகமான தீர்ப்பை பிரேசில் நாட்டு நீதிபதி வழங்கியுள்ளார்.

பிரேசிலின் மத்தியப் பகுதியில் உள்ள காம்போ கிராண்டே என்ற இடத்தில் வசித்த , 24 வயதான ஜூலியானோ ரிபைரோ காம்போஸ் என்ற பெண், பத்திரிகையாளராகப் பணி புரிந்து வந்தார். அவர், சென்ற வருடம் மே மாதம், அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட பிரச்சினையினால் உயிரிழந்தார். ஆனால், அவர் இறப்பதற்கு முன்னமே சமூக இணையதளமான பேஸ்புக்கில் தனக்கென சுயவிவரமிட்ட பக்கத்தைத் தொடங்கியிருந்தார்.

இதில் அவர் இறந்த பின்னரும், அவரது நண்பர்களும், உறவினர்களும் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவரைப் பற்றிய செய்திகள், அவருக்கான பாடல்கள் போன்றவற்றை அனுப்பிக் கொண்டிருந்தனர். இது தனக்கு மிகவும் துன்பத்தைத் தருவதாக கூறினார் , பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த அவரது தாயார், டோலோரெஸ் பெரைரா குடின்கோ(50) . அந்தப் பக்கத்தை தானே நீக்க முயற்சித்தும் பார்த்தார். ஆனால், முடியவில்லை என்பதால், பேஸ்புக் நிறுவனத்திடம் அதுகுறித்து கூறினார். ஆனால் அந்நிறுவனம் இறந்தவரின் நினைவுப் பக்கமாக அதனைத் தொடர்ந்துள்ளது.

ஏழு மாதங்கள் தொடர்ந்து முயற்சி செய்தும் முடியாமல் போனதால், அந்தத் தாய், நீதிமன்றத்தின் உதவியை நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி வனியா டி பவுலா ஆரண்டீஸ், மார்ச் மாதம் 19ஆம் தேதி ஒருமுறையும், ஏப்ரல் 10ஆம் தேதி ஒருமுறையும் ஜூலியா யானோவின் விவரப்பக்கத்தை மூடும்படி பேஸ்புக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

மீண்டும் இந்த வாரம் 48 மணி நேரத்திற்குள் அந்தப்பக்கத்தை மூடாவிட்டால், சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று உத்தரவு பிறப்பித்த பின்னரே, ஜூலியானோவின் பக்கம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆயினும், அவரது நண்பர்களுக்கு மட்டும் அந்தப்பகுதி நினைவுப் பகுதியாகத் தொடர்ந்திருக்கும்படி அந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: ,