உண்ணாவிரதத்தால் பயனேதும் கிட்டாது இலங்கையருக்கு ஆஸி. பிரதமர் மிரட்டல்

australian
அரசின் கொள்கைகளை மாற்றுமாறு வலியுறுத்தி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மேற்கொள்கின்ற உண்ணாவிரதம் வெற்றி அளிக்காது என ஆஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

மெல்பேர்ன் தடுப்பு நிலையத்தில் உள்ள 27 புகலிடக் கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இவர்கள் ஏன் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர் என்பதற்குக் குடிவரவுத் திணைக்களம் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. இதேவேளை, அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என நம்பப்படுகின்றது.

ஆனால் அவர்களைச் சமூகத்தினுள் விடுவதற்குப் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அடிப்படையில் அகதிகள் மதிப்பிடப்படுவதன் முக்கியத்துவத்தைப் பிரதமர் ஜுலியா கில்லார்ட் வலியுறுத்தியுள்ளார்.

உண்ணாவிரதம் மேற்கொள்கின்ற அகதிகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். ஆனால் தற்போது அவர்கள் திரவ ஆகாரங்களை உட்கொள்வதாகவும் அகதிகளுக்கான நடவடிக்கை கூட்டமைப்பின் பேச்சாளர் அயன் ரின்ரோல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜெரல்ரனின் மேற்கு ஆஸ்திரேலியத் துறைமுகத்துக்குப் படகில் வந்தடைந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் எவராவது இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா என அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள் எனக் குடிவரவு அமைச்சர் பிரென்டன் ஓ கோனர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,