மன்மோகன் சிங் என்ற தவளையின் ஆட்சியே இன்று இந்தியாவில் உள்ளது! வெகுவிரைவில் துண்டு துண்டாகப் பிரியும்!! ஆளும் கட்சி எம்.பி. ஜே.ஆர். சூரியப் பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தியாவில் இன்று இருப்பது மன்மோகன் சிங் என்ற தவளையின் தலைமையிலான பலவீனமுற்ற ஆட்சியாகும். வெகுவிரைவில் இந்தியா துண்டு துண்டாகப் பிரியும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி. ஜே.ஆர். சூரியப் பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெகுவிரைவில் சீனா பலமுள்ள நாடாக பொருளாதாரத்தில் முதலிடத்திற்கு உயரும் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உற்பத்தி வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சூரியப் பெரும எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற பல தலைவர்கள் காணப்பட்ட இந்தியா இன்று பலவீனமடைந்துள்ளது. எதிர்காலத்தில் துண்டு துண்டாகப் பிரியும் ஆபத்தையும் அந்நாடு எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் இன்று மன்மோகன் சிங் என்ற தவளையின் தலைமையிலான அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. பலவீனமடைந்த ராஜ்ஜியமாக மாறி வருகிறது. ஆனால் சீனா படிப்படியாக உயர்ந்து இன்று உலகின் பலமுள்ள நாடாக பொருளாதாரத்தில் முதன்மை நாடாக மாறுவது வெகு தூரத்தில் இல்லை.
அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகளின் பொருளாதாரம் அனைத்தும் மிக விரைவில் வீழ்ச்சி காணும்.
ஆசியா தலை நிமிரும் காலம் நெருங்கிவந்துவிட்டது. அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது. அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வெள்ளையர்கள் தயாரில்லை. எனவேதான் இரண்டாவது தடவையாகவும் ஒபாமாவை ஜனாதிபதியாக்கினார்கள்.
அமெரிக்காவின் ”திதியை” நடத்தும் பொறுப்பை அமெரிக்கர்கள், வெள்ளையர்கள், கறுப்பான ஒபாமாவிடம் கையளித்துள்ளனர்.
ஐ.நாவுக்கோ, அமெரிக்காவுக்கோ நாம் பயமில்லை. இவர்களை காலால் உதைத்து வாய்க்காலில் தள்ளிவிட்டு ஆசியாவை கட்டியெழுப்பும் தலைமை எமக்குக் கிடைத்துள்ளது என்றும் சூரியப் பெரும எம்.பி. தெரிவித்தார்.
-Globaltamilnews