இலங்கையின் பொருள்களை புறக்கணிக்குமாறு பிரசாரம்

Sri_Lankaஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து வலுவாகிவரும் நிலையில் இலங்கைப் பொருள்களைப் புறக்கணிக்கும் கையெழுத்து வேட்டை மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரம் என்பன தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் சென்னை மரீனா கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அந்த அமைப்பு தெரிவித்துள்ளதாவது:

இந்திய அரசு இலங்கைக்கு வரிச்சலுகை அளித்த பின்பு, இலங்கையில் இருந்து நிறையப் பொருள்கள் தமிழகச் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளன. இதனால் இலங்கைப் பொருளாதாரம் பலம் பெறும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு இலங்கையின் பொருளாதாரம் பலம் பெற்றால், இலங்கை அரசு மேலும் ஆயுதம் வாங்கிக் குவிக்க அந்தப் பணத்தைச் செலவிடும். மேலும் இலங்கை இராணுவத்துக்கு இந்தப் பணம் பயன்படும்.

ஏற்கனவே தமிழர் பகுதிகளில் இலங்கை இராணுவம் நிரந்தர முகாமிட்டுத் தமிழர்களுக்குக் கொடும் துன்பம் இழைக்கிறது. இந்த நிலையில் இலங்கையின் ஏற்றுமதி பெருகினால் அது இலங்கைக்கு நன்மையைப் பயக்குமே அன்றித் தமிழர்களுக்கு நன்மை பயக்காது.

அதனால் இலங்கையின் ஏற்றுமதி சந்தையை முடக்குவது தான் இலங்கையின் மீதான தமிழக அரசின் பொருளாதாரத் தடையை மேலும் வலுப்படுத்தும் என்ற அடிப்படையில், இலங்கையின் உற்பத்தி பொருள்களைத் தமிழகத் தமிழர்கள் யாரும் வாங்க வேண்டாம் என்ற பரப்புரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் ஈடுபட்டுள்ளதுஎன்றுள்ளது.

-uthayan

Tags: ,