தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவதற்கான மந்திரக்கோல் தங்களிடமில்லை என்று கூறும் இந்தியா தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்தொழிப்பதற்கு எந்தக் கோலை பாவித்திருந்தது? யுத்தத்தினை அழித்தவர்கள் தீர்வினை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்திய அரசாங்கம், பாரதீய ஜனதா கட்சியின் நிலைப்பாடு குறித்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா மீண்டும் தமிழர்களை ஏமாற்றப் போகின்றது என்பதே தமிழ் மக்கள் மத்தியிலும், தமிழ் அரசியல் கட்சிகளிடையேயும் இருந்து வரும் கருத்தாகும்.
தற்போது இந்த சந்தேக நிலை மேலும் வலுப்பெற்றுள்ளது. ஏனெனில் ஒரு புறம் 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெறுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுவர அதேநேரம் இந்திய அரசாங்கம் இதுகுறித்து கவனம் செலுத்தாமலும் இருக்கிறது.
இதனால் இந்திய எதிர்க்கட்சி தலைவர்களின் அரசாங்கத்திற்கு சார்பான கருத்துக்கள் போன்றவை இந்தியா தமிழர்களை மீண்டும் ஒருமுறை ஏமாற்றப் போகின்றதோ என்ற தோற்றப்பாட்டை இலங்கை அரசியல் களத்தில் உருவாக்கியுள்ளது.
அண்மையில் இந்திய பாரதிய ஜனதா கட்சியின் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கான மந்திரக்கோல் தங்களிடமில்லை என்று கூறியிருந்தார்.
எனவே அவர்களிடம் நான் கேட்கின்றேன் இலங்கை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு வழங்குவதற்கு மட்டும் இந்தியாவிடம் மந்திரக்கோல் இல்லை என்றால், தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்தொழிப்பதற்காக இந்தியா எந்தக் கோலை பாவித்திருந்தது?
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போது விடுதலைப் புலிகளை இந்தியா பலவீனப்படுத்தி தமிழர்களை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.
அதன்போது தமிழர்களுக்கான தீர்வை இந்தியா பெற்றுத்தராமல் சென்றதால் இலங்கையில் ஆயுதப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து கடந்த 2009ம் ஆண்டு மீண்டும் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்து தமிழ் மக்களை அநாதரவாக்கிய இந்தியா தமிழர்களை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்து நான்கு வருடங்களாகின்றது.
இது வரை தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்த சிறு முயற்சிகளை கூட இந்தியா முன்னெடுக்காமல் இருப்பது மீண்டுமொரு வரலாற்றுத் தவறை இந்தியா செய்யப்போகின்றதா என்ற கேள்விகளையே தோற்றுவித்துள்ளது என்றார்.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு