1.2 பில்லியன் பெறுமதியுடைய புலிகளின் சொத்துக்கள் அரசாங்கத்தினால் பறிமுதல்

LTTE-Flag
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள், இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் பின்னர் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல்வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் தீவிர விசாரணைகளின் இவை விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அண்மையில் உத்தியோகபூர்வமாக இந்தச் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காணிகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அச்சகங்கள், வீடுகள், இயந்திரங்கள், ஆடைத்தொழிற்சாலைகள், மீன்பிடி இழுவைப் படகுகள் என்பன இந்த 1.2 மில்லியன் ரூபா சொத்துகளில் அடங்கியுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ தகவலின் படி அதிகமான சொத்துக்கள் கொழும்பில் உள்ளதாகவும், ஏனையவை பிற இடங்களில் இருப்பதாகவும், அவ் அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்தவாரம் 55 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வைப்பிலிடப்பட்டுள்ள வெளிநாட்டு வங்கிக்கணக்கில் இருந்தும்;, 30 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் வைப்பிலிடப்பட்டுள்ள பல்வேறு வெளிநாட்டு வங்கிக்கணக்குகளில் இருந்தும் அரசாங்கம் பணத்தை பறிமுதல்செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவை தவிர மேலும் பல நிலையான வங்கிக் கணக்குகளை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு கண்காணித்து வருவதாகவும், அவற்றின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘மேலும் ஒரு பில்லியன் ரூபா வரை பெறுமதியான வங்கிக்கணக்குகளையும் சொத்துக்களையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம், அவையும் விரைவில் பறிமுதல் செய்யப்படும்’ என்றும் புலனாய்வுப் பிவிவு அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் கூறுகிறது.

விடுதலைப் புலிகளின் நிதியை வைத்துள்ள மேலும் பல வங்கிக்கணக்குகளை கண்டறிய வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து தீவிரவாத புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்ட தொடர்பாடல் கருவியும் அடங்குகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளில் கட்டுநாயக்க விமான நிலையம் அருகில் உள்ள நிலம் ஒன்றும் உள்ளது. விமான நிலையம் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்தவே இந்த நிலத்தை புலிகள் கையகப்படுத்தியுள்ளனர்.

வெள்ளவத்தையில் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பெயரில் வாங்கப்பட்ட மூன்று மாடி குடியிருப்பு ஒன்றும், கொட்டாஞ்சேனை ஜம்பெட்டா வீதியில் உள்ள அச்சகம் ஒன்றும், யாழ்ப்பாணத்தில் ஈழநாதம் அச்சகமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துகளில் அடங்குவதாக பட்டியலிடப்பட்டுள்ளது.

குறிப்பாக காணிகள், கட்டடங்கள், ஆடைக் கைத்தொழிற்சாலைகள், வீடுகள், இயந்திர சாதனங்கள், அச்சு இயந்திரங்கள், மீன்பிடி வள்ளங்கள் உள்ளிட்ட பல்வேறு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்கிய தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட சொத்துக்களே இவ்வாறு மீட்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சொத்துக்கள் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Tags: ,