விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிறிலங்காவைப் பிரிப்பதற்கு தொடர்ந்தும் வெளிநாடுகளில் இருந்து போராடி வருகின்றனர். எனவே அவை குறித்த பாதுகாப்புத் தகவல்கள், புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் தாய்லாந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தாய்லாந்துப் பிரதமர் ஜிங்லுக் சின்வத்ராவுக்கும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று அலரி மாளிகையில் நடந்த சந்திப்பின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன்போது பாதுகாப்பு மற்றும் கடல்சார் விவகாரங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு சிறிலங்காவும் தாய்லாந்தும் இணக்கம் கண்டுள்ளன.
அத்துடன் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா போன்ற விடயங்களில் ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தை அழித்த அனுபவங்களை தாய்லாந்து உள்ளிட்ட பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு சிறிலங்கா தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.