நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெடிவைத்தகல்லு பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான கூளாமுறிப்பிலுள்ள அறுதி உறுதி மற்றும் எல். டீ.ஓ பத்திரங்களுடனான வயல் காணிகள்,
அத்துமீறிக் குடியேற்றப்பட்ட சிங்களவர்களால் அடாத்தாகப் பிடிக்கப்பட்டு அங்கு காலபோக நெற்செய்கைக்காக காணிகள் துப்பரவு செய்து ஆயத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன எனவும் இக்காணிக்குச் சொந்தக்காரர்களான தமிழ் விவசாயிகள் தம்மிடம் இது குறித்து முறையிட்டுள்ளதுடன் இவ்வாறான அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நெடுங்கேணி வெடிவைத்தகல்லு பூர்வீகத் தமிழ் விவசாயக்கிராமமாகும். காலம் காலமாக இடம் பெற்ற இனமுரண்பாட்டு வன்செயல்களால் இப்பகுதியைச் சேர்ந்தோர் இடம்பெயர்வுக்குள்ளாகினர்.
அவ்வகையில், இங்குள்ள கூளாமுறிப்புகுளப் பாசனக்காணிகளில் வேளாண்மை செய்தோரும் இடம்பெயர்வுக்குள்ளாகினர். இங்கு 60 ஏக்கர் அறுதி உறுதிக்காணிகளும் 40 ஏக்கர் எல்.டீ.ஒ பத்திரக் காணிகளும் தமிழ் மக்களுக்குச் சொந்தமாகவுள்ளன.
கடந்த பல வருடங்களாக இக்காணிகளை உழுது வேளாண்மையில் ஈடுபட இவர்களால் முடியாதிருந்த நிலையில் கடந்த வருடம் உழவு வேலைகளை மேற்கொண்டனர். கூளாமுறிப்புக்குளம் உடைப்புக் காரணமாக அவர்களால் விதைப்பில் ஈடுபடமுடியவில்லை.
எனினும் இவ்வருடம் அவர்கள் விதைப்புக்குத் தயாராகும்போதுதான், இவ்வாறு சிங்கள மக்களால் அக்காணிகள் அடாத்தாகப் பிடிக்கப்பட்டு உளப்பட்டுள்ளதுடன் குளத்தின் அணைக்கட்டும் துப்பரவாக்கப்பட்டு உடைப்பும் திருத்தப்படுகின்றன. இவ்வாறாக அடாத்தாக இக்காணிகளில் புகுந்தோர் தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை மற்றும் குருணாகல் நகர வாசிகளாவர்.
ஏற்கனவே, தமிழ் மக்களின் பூர்வீக விவசாயக் கிராமமான கொக்கச்சான்குளத்தில் யுத்தம் ஓய்விற்கு வந்து 2009 ஆம் ஆண்டின் பின்னர் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்களை அரச நிர்வாகம் நேரடியாகவே பேரூந்துகள் மூலம் கொண்டுவந்து குடியேற்றியதுடன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறுமாத உலர் உணவு, வழங்கியதுடன் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் கொள்முதலுக்கு பணத்தையும் வாரி வழங்கியது.
தற்போது இக்கிராமம் கலாபோகஸ்வௌ எனப் பெயர் மாற்றப்பட்டதுடன் ஆளும் தரப்பின் உயர் மட்ட அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் விஜயங்களால் நேரடிக் கண்காணிப்பில் அதன் அபிவிருத்தி முன்னெடுக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.
கூளாமுறிப்பிலும் இங்கு குடியேற்றம் செய்யப்பட்டது போன்றே சிங்கள மயமாக்கும் பணிகள் அரசால் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புத் தரப்பினரின் உதவியும் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
வடமாகாணசபை தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில் வன்னிமாவட்ட எல்லைக் கிராமங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இங்குள்ள பாதுகாப்புத் தரப்பினர் நிலைகொண்டுள்ள தனியார், அரச மற்றும் திணைக்கள, பாடசாலைக் காணிகளை அவர்களுக்கே நிரந்தரமாக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளமையும் எமது மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளன.
எமது மண்ணின் எல்லைகள் மாற்றப்படுவதும் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கம் பெறுவதுடன் பாதுகாப்புத்தரப்பினருக்கு சட்டவிரோதமாகக் காணி உறுதி வழங்கப்படுவதும் இந்நிலப்பரப்பில் சனத்தொகை விகிதாசாரத்தை திட்டமிட்டே மாற்றும் அரசின் வேலைத் திட்டமாகும். தமிழர் வாக்குப்பலத்தைச் சிதைக்கும் ஏற்பாடே இது.
இதன்மூலம், தமிழ் மக்களுக்குச் சிறப்பாக எதுவும் மேற்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்கள் சகல சௌபாக்கியங்களுடனும் இரண்டறக் கலந்து வாழ்வதாக சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டவுமே அரசு அவசரப்படுகின்றது.
எனவே, அத்துமீறிய குடியேற்றங்களையும் ஏனைய இன அழிப்பு நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் முன்வரவேண்டுமெனவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இருந்து எமது செய்தியாளர் வாசு-