நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் மகிந்தவுக்கு ஒபாமாவை விட வசதி வாய்ப்புக்கள்- ரணில்

tamil-news-ranil
இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு உருவாக்குவது தொடர்பில் மக்கள் கருத்து அறிவதற்கு என இணையத்தளம் ஒன்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் இன்று (30ம் திகதி) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஐ.தே.க தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க,

´தாதுசேனன், மகாசேனன், பராக்கிரமபாகு போன்ற மன்னர்கள் இணைந்து கட்டிய குளங்களுக்கு அதிகமாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன குளங்களை கட்டியுள்ளார். மகாவலி போன்ற பாரிய திட்டங்களை செயற்படுத்த அன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பயன்படுத்தப்பட்டது.

1978ம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஏற்படுத்தி அரசு பிரதானி, நிறைவேற்று பிரதானி, அரசாங்க பிரதானி போன்ற அதிகாரங்களை ஒன்றிணைத்தது அபிவிருத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகும்.

அப்போது காலத்திற்கு ஏற்றவாறு செயற்பட்டோம். நாட்டுக்கு ஜனாதிபதி, பிரதமரை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி நாட்டில் மக்கள் விருப்பத்திற்கு அமைய மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும்.

இன்று ஜனாதிபதியும் நீதிமன்றமும் இணைந்து பாராளுமன்றத்தை பலமிழக்கச் செய்துள்ளனர். பின் ஜனாதிபதி பாராளுமன்றத்துடன் இணைந்து நீதிமன்றை பலமிழக்கச் செய்தார்.

அதன்படி இன்று பாராளுமன்றம், நீதிமன்றம், மனித உரிமை, வாக்குரிமை போன்ற அனைத்தும் பலமிழத்துள்ளன. பராக் ஒபாமாவைவிட அதிக வசதிகள் இன்றைய ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே ஜனாதிபதி மாத்திரம் வெற்றியடைந்துள்ளார். மக்கள் தோல்வியடைந்துள்ளனர்.´

இந்த நிலை மாறவேண்டும் எனவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,