கூட்டமைப்பு இல்லாத தேர்தல் களம் மணமக்கள் இல்லாத திருமணம் போன்றது; மனோகணேசன்

manokaneshan
பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத வடமாகாண சபைத் தேர்தலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்று நான் நம்பவில்லை. கூட்டமைப்பு இல்லாத தேர்தல் களம் மணமக்கள் இல்லாத திருமணம் போன்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற, அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசுக்குள் இருக்கும் தீவிரவாதிகள் கூப்பாடு போடுவதை காட்டி, வட மாகாணசபை தேர்தலை நடத்தும் முன்னர் 19ம் திருத்தத்தை கொண்டு வந்து காணி, பொலிஸ் அதிகாரங்களை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்கிறது.

ஆனால், காணி, போலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் நடத்தப்படும் வட மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிடும் என நான் நம்பவில்லை.

அத்துடன் காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறித்து விட்டு தேர்தல் நடாத்தும் ஒரு நிலைமையை நாம் வரவேற்கப்போவதும் இல்லை.

இந்த நிலையில் கூட்டமைப்பு இல்லாமல், வடக்கில் அரசாங்கம் மாகாணசபை தேர்தல் நடத்துமானால், அது மணமக்கள் இல்லாமல் திருமணம் நடத்துவது போன்றதாகும்.

இந்த நெருக்கடி நிலைமையை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். பொலிஸ், காணி அதிகாரங்களை உள்ளடக்கிய இன்றைய 13ம் திருத்தத்தின் அடிப்படையிலான மாகாணசபையை ஏற்றுக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிட கூடாது என கூறிவரும் பிரிவினர் தமிழ் தேசிய தரப்பில் இருக்கின்றார்கள் என்பதை சிங்கள மக்களும், அரசாங்கமும் அறிந்துகொள்ள வேண்டும்.

அதற்கும் மேலாக இங்குள்ள சிங்கள ஊடகங்கள் இந்த செய்தியை சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த மாகாணசபையை ஏதோ, காணக்கிடைக்காத பெரும் தீர்வாக கருதி தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக தென்னிலங்கையில் எவரும் நினைத்து விடக்கூடாது. எனக்கு தெரிய, வடக்கில் அப்படி ஒரு நிலைமை இல்லை.

இந்த மாகாணசபை சபை முறைமையை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று சொல்லுபவர்களும் வடக்கில் இருக்கிறார்கள்.

இந்தநிலையில் சிங்கள தீவிரவாதிகள் சொல்லுகின்றார்கள் என்று சொல்லி, இன்று சட்டப்படி மாகாணசபைக்கு இருக்கும் அதிகாரங்களை வெட்டி குறைக்கும் விஷப் பரீட்சையில் இறங்க வேண்டாம் என அரசாங்கத்துக்கு கூறுகின்றேன்.

நவம்பரில் பொதுநலவாய மாநாடு, செப்டம்பரில் வட மாகாணசபை தேர்தல் என்று ஒரு இரகசிய ஒப்பந்தம் இருப்பது விமல் வீரவன்சவுக்கு தெரியாதா? சம்பிக்க ரணவக்கவுக்கு தெரியாதா?

அரசாங்கம் இத்தகைய ஒரு சிக்கலில் இன்று சிக்கி இருப்பது இவர்களுக்கு தெரியாதா? ஆகவே அரசாங்கம் வடக்கில் தேர்தலை நடத்தியே ஆக வேண்டும்.

ஆனால், தீவிரவாதிகள் எதிர்க்கிறார்கள் என்று சொல்லி 19ம் திருத்தம் கொண்டு வந்து, அதிகாரங்களை வெட்டி குறைத்து, சர்வதேசத்தையும் மீண்டும் ஏமாற்றி, குறுக்கு வழியில் வடக்கில் மாகாணசபை தேர்தலில் நடத்த அரசு முயற்சி செய்தால் அது பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்க விரும்புகின்றேன்.

அதிகாரங்களை வெட்டி குறைத்தால், அரசிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறும் என்று சொல்கிறார்கள். அப்படியே நடத்தினால் விமல் வீரவன்ச வெளியேறுவார் என சொல்கிறார். திடீரென வீரம் வந்து இன்னும் சில தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும், இடதுசாரிகளும்கூட வெளியேறலாம்.

எப்படியும் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, இன்றைய அரசுக்குள் இருக்கும் சில அமைச்சர்களை, முன்னாள் அமைச்சர்களாக இந்த நாட்டில் பார்க்கலாம் என்றார்.

-uthayan

Tags: ,