இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு தலைவர் என்ற முறையில் இங்கிலாந்து ராணி எலிசபெத் தலைமை தாங்குவார். இதில் உலக நடப்புகள் குறித்து விவாதிக்கப்படும்.
வரும் நவம்பர் மாதம், இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு ராணி தலைமை தாங்கவில்லை. அதற்குப் பதிலாக இளவரசர் சார்லஸ் தலைமை வகிப்பார்.
87 வயதாகும் ராணியின் முதுமையைக் கருத்தில் கொண்டும், அயல்நாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டியும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரண்மனையின் தகவல் அதிகாரி பீட்டர் ஹன்ட் தெரிவித்துள்ளார்.
1971-ம் ஆண்டு நடைபெற்ற முதல் காமன்வெல்த் மாநாட்டில் ராணி கலந்து கொள்ளவில்லை. அதன்பின்னர், இரண்டு ஆண்டுகள் கழித்து 1973-ம் ஆண்டு கனடா நாட்டின் ஒட்டாவா நகரில் நடைபெற்ற மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அதுமுதல், ஒவ்வொரு காமன்வெல்த் மாநாட்டிலும் கலந்து கொள்வதை ராணி வழக்கமாக வைத்திருந்தார்.
1971-க்குப்பிற்கு ராணி எலிசபெத் இரண்டாவது முறையாக இப்போது காமன்வெலத் மாநாட்டுக்கு தலைமை தாங்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகள் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இங்கிலாந்து ராணி இதில் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.