ஊழல், பயங்கரவாதத்தை தடுக்க காங்., அரசு தவறி விட்டது: அனல்பறக்க சுஷ்மா பிரசாரம்

sushma-swaraj
பெங்களூரு : ஊழல், பயங்கரவாதம் ஆகியவற்றை தடுக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தவறி விட்டதாக பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ், கர்நாடக தேர்தலுக்கான தனது பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி உள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளதால் அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ.,வின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர். கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளிலும் இவர்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மே 5ம் தேதி நடைபெற உள்ள ஓட்டுப்பதிவில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ., அதிக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.,வின் சுஷ்மா சுவராஜ், அத்வானி, மோடி, ராஜ்நாத் சிங் உள்ளி‌ட்ட முக்கிய தலைவர்கள் தங்களின் பிரசாரத்தின் போது காங்கிரஸ் அரசை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.

சுஷ்மா பிரசார பேச்சு : @@ஊழல் மற்றும் பயங்கரவாதத்தை தடுக்கவோ கட்டுப்படுத்தவோ காங்கிரஸ் அரசு தவறி விட்டது; பெண்கள் பாதுகாப்பிற்கும் மிக குறைந்த அளவே காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது; அதுவும் மக்களின் நாடுதழுவிய போராட்டத்தால் நடைபெற்றது; இத்தகைய அரசின் ஆட்சி கர்நாடகாவில் இருக்க வேண்டுமா என கர்நாடகா வாக்காளர்கள் ஓட்டளிக்கும் முன் சிந்திக்க வேண்டும். இவ்வாறு சுஷ்மா தெரிவித்துள்ளார். கர்நாடகா பா.ஜ., அரசியலில் ஏற்பட்ட குழப்பங்களால் கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைப்பது கடினம் என கூறப்பட்டு வந்தாலும், பா.ஜ., தலைவர்கள் தங்களின் பிரசாரங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் தேர்தல் வாக்குறுதியாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கிலோ அரிசி ரூ.1 க்கு வழங்க உள்ளதாக பா.ஜ., அறிவித்துள்ளது.

பார்லி.,யை முடக்க பா.ஜ., திட்டம் :@@ பல்வேறு பதற்றமான சூழல்களுக்கு இடையே பார்லிமென்ட் கூட்டத் தொடர் இன்று மீண்டும் துவங்க உள்ளது. இதில் 2ஜி ஊழல் விவகாரத்தில் ஜே.பி.சி., அறிக்கை முன்கூட்டியே வெளியான விவகாரம் மற்றும் நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐ அறிக்கையை மத்திய சட்டத்துறை அமைச்சர் அஸ்வனிகுமார் மாற்றியதாக எழுந்த புகார் ஆகியவற்றை கிளப்பி அவையில் அமளியை ஏற்படுத்த பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு தொடர்பு இல்லை என ஜே.பி.சி., அறிக்கை கூறியிருந்தும், 2ஜி குறித்த அனைத்து முடிவுகளும் பிரதமரின் ஆலோசனையின் ‌பெயரிலேயே எடுக்கப்பட்டதாக முன்னாள் தொலை‌த் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராஜா கூறியிருப்பது குறித்தும் பார்லிமென்டில் இன்று கூச்சல் குழப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: ,