இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற தலையீடுகளைச் செய்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார் ஜனாதிபதி. சில தரப்புகளின் தேவையற்ற தலையீடுகளும், அழுத்தங்களும் நாட்டுக்கு எதிராகச் சதிசெய்யும் ஒரு தரப்பு இருப்பதையே கோடி காட்டுவதாகவும், அமைச்சர்கள் இது தொடர்பில் மிகவும் கவனத்துடன் நடந்துகொள்ளவேண்டுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா அண்மைக் காலமாக மேற்கொண்டு வரும் தலையீடுகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விலாவாரியாக எடுத்துக்கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் மின்கட்டண அதிகரிப்பு விடயத்திலும் அமெரிக்கா தலையிட முயற்சிகளை எடுத்ததாகவும், இவ்வாறானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கை சுயாதிபத்திய இறைமையுள்ள ஒரு நாடு. அதன் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நாம் அனுமதியளிக்கப் போவதில்லை. எமது நாட்டின் மீது மேற்குலக நாடுகள் தலையீடுகளைச் செய்வது சாதாரண விடயமல்ல. நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் ஒரு சதி நடக்கிறதா என்றே நாம் சந்தேகிக்கவேண்டியுள்ளது. எனவே, அமைச்சர்மார் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்” என்ற சாரப்பட ஜனாதிபதி கருத்துகளை முன்வைத்தார் என அரச உயர்மட்ட வட்டாரங்கள் நேற்றுமாலை “சுடர் ஒளி’யிடம் தெரிவித்தன.
-uthayan