சென்னை : ஒரே தலைப்பில் இரண்டு படங்கள் தயாராகி உள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சமீப காலமாக டைட்டில் பிரச்னை பலமாக தலை தூக்கி உள்ளது. பல்வேறு படங்களின் தலைப்புகள் பிரச்னையில் சிக்கி பிறகு மாற்றப்பட்டுள்ளன. சமீபத்தில், ‘துப்பாக்கி’, ‘கள்ளத்துப்பாக்கி’, ‘சுந்தரபாண்டியன்‘, ‘வாலு’, ‘சமர்’ உட்பட பல்வேறு படங்கள் தலைப்பு பிரச்னையில் சிக்கின. அந்த வரிசையில் இப்போது ‘உ’ என்ற படத்தின் தலைப்பும் பிரச்னையில் சிக்கி உள்ளது.
ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆஷிக் இயக்கியுள்ள படத்துக்கு ‘உ’ என்ற தலைப்பு. தம்பி ராமையா, மதுமிதா, வருண் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடெக்ஷன் பணி நடந்து வருகிறது. இதன் இயக்குனர் ஆஷிக் கூறும்போது, ‘‘இந்தத் தலைப்பை 2012 ஜூன் மாதம் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்தோம். அந்த டைட்டிலை வேறு யாரும் பதிவு செய்யாததால் எங்களுக்கு கொடுத்தனர். இந்நிலையில் வேறொரு படத்துக்கும் இதே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்’’ என்றார்.
எஃப் ஒன் ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ்.வாசன் தயாரிக்கும் படத்துக்கும் ‘உ’ என்றே தலைப்பு வைத்துள்ளனர். ரிச்சர்ட், வித்யா, ஐஸ்வர்யா நடிக்கும் இதை இயக்கும் ஜெயப்பிரகாஷிடம் கேட்டபோது, ‘நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைப்பை பதிவு செய்தோம். வேறு யாரும் இதே தலைப்பை பதிவு செய்யவில்லை என்றுதான் எங்களுக்கு கொடுத்தார்கள். நாங்கள் வைத்திருக்கிற தலைப்பு கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதால் எக்காரணம் கொண்டும் மாற்ற மாட்டோம். இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் பேசியிருக்கிறேன்’ என்றார்.
ஒரு படத்துக்கான டைட்டிலை தயாரிப்பாளர் சங்கம், கில்டு, பிலிம்சேம்பர் ஆகிய இடங்களில் பதிவு செய்யலாம். மாதம் ஒரு முறை இவ்வமைப்புகள் கூடி தலைப்புகளை பரிமாறிக்கொள்ளும். அப்போது ஒரே தலைப்பு இரண்டு பேருக்கு செல்லாது. ஆனால், சமீபகாலமாக இதில் சிக்கல் எழுந்துள்ளது. தலைப்பு பதிவை மூன்று அமைப்புகளும் கணினிமயமாக்கினால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.