இரண்டு மகன்கள் கொல்லப்பட்டதை கோத்தபாயவிடம் கேட்குமாறு ராணுவ அதிகாரி கூறினார் – ஒரு தாயின் அவலம்!

matale-mass-grave1989 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட தனது இரண்டு மகன்கள் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகில் இருந்த ரெஸ்ட் ஹவுஸ் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாகவும் மூன்று தினங்களுக்கு பின்னர், தனக்கு காட்டிய பெயர் பட்டியலில், தனது இரண்டு மகன்களின் பெயர்கள் சிகப்பு மையினால் வெட்டப்பட்டிருந்ததாகவும் மாத்தளையை சேர்ந்த கே.பி. கமலாவதி என்ற தாய் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

புல்மோட்டையில் வசித்து வந்த அவர், விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக, இந்த சம்பவம் நடைபெறுவதற்கு 4 மாதங்களுக்கு முன்னரே மாத்தளைக்கு சென்றிருந்தார். கணவர் உயிரிழந்த பின்னர், தனது 4 பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பு அவருக்கு இருந்துள்ளது.

அப்போது மாத்தளை வித்தியாலயத்திலும் விஜய வித்தியாலயத்திலும் உயர்கல்வி பயின்று வந்த அவரது இரண்டு மகன்களான 18வது சுசந்தன ஜனக்க, 17வயதான ரோஹன நிஷாந்த ஆகியோர், உக்குவளை வராகந்தவத்தை பிரதேசத்தில் இருந்த தமது வீட்டில் இருந்து இராணுவத்தினர் கடத்திச் சென்றனர். இராணுவத்தின் சுற்றிவளைப்பு தேடுதலின் போதே அவர்களை இராணுவத்தினர் கடத்திச் சென்றனர்.

அன்றைய தினம் 13 இளைஞர்களை இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். எனது பிள்ளைகளை அழைத்துச் செல்லும் போது நான் அவர்களின் பின்னால் சென்றேன். விஜய வித்தியாலத்திற்கு அருகில் இருந்த ரெஸ்ட்; ஹவுஸ் முகாமுக்கே அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பிள்ளைகளுடன் பேசுவதற்கு அனுமதிக்குமாறு நான் கேட்டேன், இராணுவத்தினர் என்னை உள்ளே செல்ல இடமளிக்கவில்லை. மூன்றாவது நாள் ஒரு இராணுவச் சிப்பாய் முகாமில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களின் பெயர்களை கொண்ட பட்டியலை வாசித்தார். சிலரின் பெயர்கள் சிகப்பு மையினால் வெட்டப்பட்டிருந்தன. அவற்றில் எனது பிள்ளைகளின் பெயர்களும் இருந்தன.

யு.பி.ஆர் பெரேரா என்ற இராணுவச் சிப்பாய், முகாமிக்கு சென்று பார்த்து விட்டு, எனது பிள்ளைகள் இன்னும் இருப்பதாக கூறினார். எனினும் பிள்ளைகளை சந்திக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்தார். பின்னர் நான் அன்றைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நந்திமித்ர ஏக்கநாயக்கவை சந்தித்து பேசினேன். கோத்தபாய ராஜபக்ஷ என்ற இராணுவ இணைப்பு அதிகாரியை சந்திக்குமாறு அவர். கூறினார்.

எனது இதயம் உடைந்து போனது. அங்கு மகிந்த ராஜபக்ஷ, பிள்ளைகள் கடத்திச் செல்லப்படுவது குறித்து பேசுகிறார். அதேவேளை அவரது தம்பி இராணுவத்தில் இருப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனது இரண்டு பிள்ளைகள் குறித்து கோத்தபாயவிடம் கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். எனினும் நான் அவரை சந்திக்க சென்ற போது, கோப்ரல் சில்வா என்பவர், கோத்தபாயவை சந்திக்க அனுமதிக்க முடியாது எனக் கூறியதுடன் என்னை அங்கிருந்து செல்லுமாறு கட்டளையிட்டார்.

பின்னர் தினமும் ரெஸ்ட் முகாமுக்கு இந்த தாய் சென்று வந்துள்ளார். பிள்ளைகள் மாத்தளையில் உள்ள பல முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறி, இராணுவத்தினர் அவரை திருப்பி அனுப்பியுள்ளனர். அவர் தமது பிள்ளைகள் குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு தெரியப்படுத்திய போதிலும் கடிதங்களை தவிர அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை. பிற்காலத்தில் விடுதலையான பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், கஜபா படைப்பிரிவுன் கீழ் இயங்கிய ரெஸ்ட்ஹவுஸ் முகாம் ஒரு வதை முகாம் என கமலாவதியிடம் தெரிவித்துள்ளனர். அந்த முகாமில் தம்முடன் அவரது பிள்ளைகளும் இருந்தனர் என அவர்கள் கூறியுள்ளனர்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஆட்சிக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட போதிலும் காணாமல் போன தமது பிள்ளைகளுக்கு இறப்புச் சான்றிதழை வழங்குவதை நிராகரித்ததாக கூறியுள்ள கமலாவதி, தனது பிள்ளைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தான் இந்த தகவலைகளை வெளியிட முயந்துள்ளதாகவும் நியாயம் கிடைக்குமா என்பது தனக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களுக்கு பின்னர், மாத்தளையில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தரான அலிக் அலுவிகாரவை, கமலாவதி சந்தித்த போது, ஏன் பிள்ளைகள் குறித்து தனக்கு தெரியப்படுத்தவில்லை என கேட்டுள்ளார். அப்படி கூறியிருந்தால் அவர்களை காப்பற்றியிருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் குற்றத்தை செய்ய உத்தரவிட்டவர்களிடமே எப்படி உதவியை கோர முடியும் என தெரிவித்துள்ள கமலாவதி, அவர்கள் அறிந்தே இந்த குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

-Globaltamilnews

Tags: ,