13 ஐ செயற்படுத்த இந்தியா தயங்காது; அடித்துக் கூறுகிறார் நாராயணசாமி

narayanasamy
“ராஜீவ் காந்தியும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி வந்த 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் அனைத்து அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். இதில் இந்தியா மிக உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறது.”

நேற்று “உதயனி’டம் கருத்துத் தெரிவித்த இந்தியாவின் திட்டக்குழு மற்றும் நாடாளுமன்ற விவகார மத்திய இணை அமைச்சர் வீ.நாராயணசாமி இவ்வாறு கூறினார்.

இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக வீ.நாராயணசாமி கூறினார்.

அமைச்சர் தொண்டமான் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி ஆகியோருக்கு இடையில் அண்மையில் நடந்த சந்திப்பில் வீ. நாராயணசாமியும் கலந்துகொண்டிருந்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

13ஆவது அரசமைப்புத் திருத்தத்திலுள்ள முழுமையான அம்சங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதில் இந்தியா உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறது என்பதை நாங்கள் சொல்லியிருக்கிறோம்.

எங்களைப் பொறுத்தவரை 13 ஆவது திருத்தத்திலுள்ள அனைத்து அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான். தலைவி சோனியாவும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளார். இதனை நாங்கள் தெளிவாக சொல்லியிருக்கிறோம் என்றார்.

Tags: , ,