பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற மகிந்த ஏன் சிங்கள மக்களின் ஆதரவுடன் பிரச்சனையை தீர்க்க முடியவல்லை! தீர்வுக்கு நாம் தயார்!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Rajavarothayam Sambanthan
தமிழ் மக்களின் ஆதரவுடன் நான் தீர்வுக்கு செல்லத் தயார். ஆனால் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற மகிந்த ஏன் மக்களின் ஆதரவுடன் தீர்வுக்கு வரவில்லை எனவும் சம்பந்தனும், ராஜபக்ஷவும் ஓர் உடன்பாட்டுக்கு வருவதாக இருந்தால் நிச்சயம் அது ஒரு நியாயமான தீர்வாகத்தானே இருக்கும்.
அதை விடுத்து எல்லோரையும் அழைத்துப் பேசித் தீர்வு காண முயற்சிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடாகத்தான் இருக்கும். அது தீர்வைக் காண்பதற்கு ஆரோக்கியமான முயற்சியும் அல்ல.

இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

இந்தியாவிலிருந்து வந்திருந்த பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் காணப்படவுள்ள அரசியல் தீர்வு வெறுமனே ராஜபக்ஷ சம்பந்தன் ஒப்பந்தமாக இருக்கமுடியாதெனத் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்து தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட சம்பந்தன் இது குறித்து மேலும் கூறியதாவது:

சம்பந்தன் ஒரு தீர்வுக்கு வரத் தயார். நான்தான் தயாரில்லை என்பது போலல்லவா ஜனாதிபதியின் கருத்து இருக்கிறது. சம்பந்தன் ஒரு தீர்வுக்கு வருவாராக இருந்தால் தனது பங்காளிகளை அழைத்து செயற்பட வேண்டியது பற்றிப் பேசுவது ஜனாதிபதியின் பொறுப்பு.

தீர்வைப் பற்றி ஏன் அவர் தனது பங்காளிக் கட்சிகளுடன் பேசக்கூடாது. ராஜபக்ஷவின் அரசியல் அந்தஸ்தும் அவரது பங்காளிக் கட்சிகளின் அந்தஸ்தும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமல்லவா?

நானும் சம்பந்தனும் நியாயமான ஒரு தீர்வுக்கு வரத் தயார். இதை ஏற்போம் என்று ஏன் அவரால் சொல்லமுடியாது? தீர்வுக்கான ஆதரவு தமிழ் மக்களிடமிருந்து எனக்குக் கிடைக்குமாக இருந்தால் சிங்கள மக்களின் ஆதரவுள்ள ராஜபக்ஷவும் ஒளிவுமறைவின்றி உண்மையாகவும், நேர்மையாகவும் செயற்பட முன்வர வேண்டும்.

சம்பந்தனும், ராஜபக்ஷவும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்தால் நிச்சயம் அது நியாயமான ஒரு தீர்வை நோக்கியதாகத்தான் இருக்கும். நியாயமான ஒரு தீர்வுக்கு சம்பந்தன் தயார் என்பது அவருக்கும் தெரியும்.

அதேவேளை இந்தியா, அமெரிக்கா, சர்வதேச சமூகம் ஆகியவை தன்பக்கம் இல்லையென்பதும் அவருக்குத் தெரியும். தீர்வுக்காக எல்லோரையும் அழைத்துப் பேசுவது என்பது குழப்புவதற்காகத்தான். நேர்மையாகத் தீர்வைக் காண்பதற்கல்ல எனவும் சம்பந்தன் கூறினார்.

இலங்கையில் இருந்து எடது செய்தியாளர் வாசு-

Tags: ,