அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் தூளை கொட்டி விசாரணை செய்யும் இலங்கை பொலிஸ்!- ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு

chilli
இலங்கை பொலிஸ் விசாரணைகளின்போது, மிளகாய் பொடியை கண்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கொட்டுதல் போன்ற மோசமான சித்திரவதை முறைகளைக் கையாள்வதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டுகிறது.

அண்மையில் நடந்துள்ள 7 சித்திரவதை சம்பவங்களை சுட்டிக்காட்டி அந்த நிறுவனம் ஜனாதிபதி மஹிகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ செய்தி சேவைக்கு தெரிவிக்கையில்,

‘அண்மையில் திருட்டுக் குற்றச்சாட்டு ஒன்றில் கைதான ஒருவர் கண்ணில் மிளகாய் தூள் கொட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். இலங்கை பொலிஸ் விசாரணையில் இவ்வாறான சித்திரவதைகள் அதிகரித்து காணப்படுகிறன்றன. இதற்கு எம்மிடம் ஆதாரம் உள்ளது.

இந்த சித்திரவதைகள் குறித்து பொலிஸ் ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் முறைப்பாட்டு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளோம். ஆனால் எதுவித பலனும் கிடைக்கவில்லை.

அதனால்தான் 78ம் ஆண்டு அரசியல் யாப்பின்படி சகல அதிகாரங்களும் படைத்த ஜனாதிபதிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளோம். அவர் உத்தரவிட்டால்தான் எல்லாம் நடக்கும்.

சித்திரவதைகள் குறித்து 400 சம்பவங்கள் எம்மிடம் பதிவாகியுள்ளன. இவற்றை புத்தகமாக வெளியிட உள்ளோம்.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐநா ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. ஆனால் இலங்கை பொலிஸ் அதனை மீறி செயற்படுகிறது.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐநா மாநாடு 2011ல் நடந்தபோது இலங்கையில் பொலிஸ் சித்திரவதைகள் குறித்து முறைப்பாடு செய்தோம். சம்பந்தப்பட்டவர்களிடம் ஐநா அதிகாரிகள் விசாரணையும் மேற்கொண்டனர். எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறு முறைப்பாடு செய்வோம்’ என பசில் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்தக்குற்றச்சாட்டை மறுத்துள்ள அரசாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லஇ ‘எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் பொலிஸார் விசாரணைகளில் கடைபிடிக்கும் முறைகளையே இலங்கை பொலிஸாரும் கடைபிடிக்கின்றனர்.

சில நிறுவனங்கள் அடிப்படைஇ ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றன’ என்று பதிலளித்தார்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,