தன்னை சீரழித்த இராணுவச் சிப்பாயை அடையாளம் காட்டிய 7 வயது சிறுமி

army
வவுனியா நெடுங்கேணியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை, பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளியன்று (7) நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளதாகப் பொலிசார் தெரிவத்துள்ளனர்.

கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுங்கேணி சேனைப்பிலவில் பாடசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பக் காத்திருந்த இந்தச் சிறுமி அடையாளம் தெரியாத ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள்.

பின்னர், பாழடைந்த கிணறு ஒன்றுக்கருகில் உள்ள பற்றைக்குள்ளிருந்து இந்தச் சிறுமி மீட்கப்பட்டிருந்தாள்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமி இன்று வெள்ளியன்று வவுனியா நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை அடையாளம் காட்டியுள்ளார்.

இன்று நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டபோது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமது ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதற்காக அங்கிருந்த சட்டத்தரணிகள் அனைவரும் எழுந்துநின்று ஆஜராக முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையிலேயே தன்னை சீரழித்தது கைது செய்யப்பட்டுள்ள இராணுவச் சிப்பாய் தான் என்பதை சிறுமி அடையாளம் காட்டியது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரி அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு நடத்திய அந்த ஆர்ப்பாட்டத்தில், சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக புரியப்படுகின்ற வன்முறைகளுக்கு எதிராக பெருமளவிலானோர் குரல் கொடுத்தனர்.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,