முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு 7ல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும், அச்சந்திப்பில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு அதிகமாக இருவரும் பல்வேறு அரசியல் விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதி தோ்தல், 2014ம் ஆண்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையிலேயே இந்த இரகசிய சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வெற்றியீட்டுவது? அதற்கான திட்டங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது? போன்ற விடயங்கள் இவ் இரகசிய சந்திப்பின் போது ஆராயப்பட்டதுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-nerudal