யாழில் பாரதீய ஜனதா கட்சியிடம் 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக சிவில் பிரதிநிதிகளால் எடுத்துரைப்பு

bjp_team_in_lankaபதின்மூன்றாவது அரசியல் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படக் கூடாது என இலங்கை வந்துள்ள பாரதீய ஜனதா கட்சி குழுவினரிடம் யாழ்ப்பாணத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

இலங்கை, இந்திய அரசாங்கங்களின் விருப்பத்துடனனேயே, இந்த அரசியல் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிலர் இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரியிருக்கின்றனர்.

கொழும்பில் உள்ள சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தின் அழைப்பில் இலங்கை வந்துள்ள பாரதிய ஜனதாக்கட்சியின் ஆறு பேர் கொண்ட குழு புதனன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பலதரப்பட்டவர்களைச் சந்தித்திருக்கின்றது.

பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதித் தலைவர் ரவிசங்கர் பிரசாத் தலைமையில் யாழ்ப்பாணத்திற்குச் சென்ற இக்குழுவினர், யாழ்ப்பாணம் குருநகரில் இந்திய நிதி உதவியுடன் புனரமைக்கப்பட்டுள்ள சீநோர் மீன்பிடி வலைகள் தயாரிக்கும் தொழிற்சாலையைப் பார்வையிட்டுள்ளனர். அதன் பின்னர், அரியாலையில் உள்ள இந்திய வீட்டுத்திட்டத்திற்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்திருக்கின்றனர்.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் யாழ் நகர மேயர் திருமதி பற்குணராஜா யோகேஸ்வரி மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர் கொண்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றனர். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த யாழ் மாவட்ட கடற்தொழில் சங்கங்களின் சமாசத் தலைவர் எமிலியாம்பிள்ளை இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் இலங்கை மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி, தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகத் தெரிவித்து, இந்திய மீனவர்களின் வருகையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய குழுவினர் பின்னர் வடமாகாண ஆளுனர் சந்திரசிறியையும் சந்தித்துப் பேசியுள்ளனர். வியாழனன்று இக்குழுவினர் கொழும்பில் அரச தரப்பினரையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரையும் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து எமது செய்தியானர் வாசு-

Tags: