இலங்கையில் விவசாயிகளுக்குரிய ஒய்வூதியம் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அவர்களில் பலரும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
விவசாய காப்புறுதி சபையின் ஊடாக இலங்கையில் விவசாயிகளுக்கான ஒய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
விவசாய காப்புறுதி சபை அதிகாரிகள் மற்றும் விவசாயிகளின் தகவல்களின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு 17 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்களின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு அமைச்சர்கள் தொடக்கம் மனித உரிமை அமைப்புகள் என பலரையும் சந்தித்து தொடர்ந்தும் மனுக்களை கையளித்தும் முறையீடுகளை செய்தும் வருகின்றனர்.
சம்மாந்துறை பிரதேசத்தை 64 வயதான ஆதம்பாவா அஸீஸ் 60 வயதின் பின்னர் ஒய்வூதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 20 வருடங்களுக்கு மேலாக இதற்கான கட்டணத்தை செலுத்தி வந்ததாக கூறுகின்றார்.
விவசாயிகளுக்கு ரூபாய் 1050 தொடக்கம் 1300 வரையில் ஒய்வூதியம் வழங்கப்பட்டு வந்ததாகவும் தற்போது எந்தவிதமான காரணமும் கூறப்படாமல் முன்னறிவிப்பும் இன்றி அது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கவலையுடன் தெரிவிக்கின்றார்.
விவசாயியான 61 வயதான முகமட் ஹனி முகமட் ஹுசைன் விவசாய துறையினரால் விடுக்கப்பட்ட அறிவித்தலின் பேரில் இத்திட்டத்தில் இணைந்து வருடமொன்றுக்கு இரு தடவைகள் தவணைப் பணம் செலுத்தி வந்தாகவும் மாதந்தம் ரூபா 1140 ஒய்வூதிய கொடுப்பனவை தான் அஞ்சல் அலுவலகங்களில் பெற்று வந்ததாகவும் தெரிவிக்கின்றார்.
தமது ஒய்வூதிய கொடுப்பனவு நிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் கேட்டால் ஜனாதிபதிதான் நிதி அமைச்சர், அங்கிருந்துதான் நிதி வரவேண்டும் என பதில் தரப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
மற்றுமோர் விவசாயி, 72 வயதான மொகதீன்பாவா அஹமது லெப்பை விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்பார்கள். ஆனால் வயோதிபமடைந்துள்ள விவசாயிகள் ஒய்வூதியத்தில் இணைந்தும் இப்போ பிச்சை எடுக்கும் நிலையிலே உள்ளனர் என்றும் இந்தப் பிரச்சினையை அமைச்சர்கள் பலரிடம் தெரிவித்தும் பயன் இல்லை என்றும் கூறுகிறார்.
இந்தப் பிரச்சினை குறித்து விவசாய காப்புறுதி சபையுடன் தொடர்பு கொண்ட போதிலும் அதிகாரபூர்வமாக பதிலளிக்க கூடியவர்களின் தொடர்புகளை பெற முடியவில்லை.
இந்த ஓய்வூதியம் வழங்கப்படுவது நாடெங்கிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சுத்தான் இது தொடர்பான முடிவு எடுக்க வேண்டும் என தமது பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகளின் பதில்களிலிருந்து அறிய முடிந்தது.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-