இலங்கையின் வடக்கு மாகாணத்தில், குறிப்பிட்டபடி தேர்தல் நடைபெறுமா? என்பதில் தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆளுங்கட்சியும், அதன் கூட்டணிக்கட்சிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிடிவாதமான முயற்சிகளின் விளைவாகவே தனக்கு, இந்த சந்தேகம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்துவதற்கு இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தி, நிலம் தொடர்பாகவும், காவல் துறை தொடர்பாகவும் அதிகாரம் வழங்குவது என்பது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தி, தேச ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில், ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொடர்ந்து, 13 ஆவது திருத்ததை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றிற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி, `13 ஆவது திருத்தத்தை பலவீனப்படுத்தும் எவ்வித முயற்சியையும் இலங்கை மேற்கொள்ளக் கூடாது’ என தெரிவித்திருக்கிறார்.
எனினும், இலங்கையில் ஆளுங்கட்சியும், அதன் கூட்டணிக்கட்சிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிடிவாதமான முயற்சிகளின் விளைவாக இலங்கை வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்டபடி தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மீனவர் விவகாரம் குறித்து கவலை தெரிவித்துள்ள கருணாநிதி, இந்திய கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்களின் மீன்பிடிப்பு உரிமமும் இரத்து செய்யப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மீனவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீன மீன்பிடிக் கப்பல்கள் இலங்கைக் கொடியுடன் சர்வதேசக் கடல் எல்லையில் மீன் பிடிக்கவுள்ளதாக இலங்கையின் அறிவிப்பு தொடர்பான தகவலை வெளியிட்ட கருணாநிதி, இந்திய மீனவர்களை விரட்டிவிட்டு சீன மீனவர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ள இலங்கை அரசின் நடவடிக்கை தமிழக மீனவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும், இந்த இரு பிரச்சினைகளில் இருந்தும் நமது மீனவர்களைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.