மிருகவதையை எதிர்த்து தீக்குளித்து உயிரிழந்த பிக்குவின் சடலத்துக்காக இரண்டு பௌத்த அமைப்புகளிடையே ஏற்பட்ட மோதலால் கொழும்பில் நேற்று பெரும் அமளி ஏற்பட்டது.
தீக்குளித்து உயிரிழந்திருந்த வண.போவத்த இந்திரரட்ன என்ற பிக்குவின் சடலம் வைத்தியசாலையில் இருந்து எடுத்து வரப்பட்டு பொரளையில் உள்ள ஜயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது.
அந்தச் சடலத்தை இறுதிக்கிரியைகள் செய்வதற்காக பிக்குகளின் ஒருசாரார் இரத்தினபுரி கஹவத்தை ஸ்ரீசுகத விகாரைக்கு எடுத்துச் சென்று விட்டனர்.
ஆயினும் இதனையறிந்த சிஹல ராவய என்ற பிக்குகள் அமைப்பு ” எமக்குத் தெரியாமல் எப்படி சடலத்தை கொண்டு செல்ல முடியும். எம்மிடம் தான் சடலத்தை ஒப்படைக்க வேண்டும்.” என்று கொந்தளித்தது.
பின்னர் அந்த அமைப்பைச் சேர்ந்த பிக்குகளுக்கும் ஏனைய பிக்குகளுக்கும் இடையே பொரளை மலர்ச்சாலைப் பகுதியில் மோதல் வெடித்தது. இதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் எடுத்த முயற்சிகளும் பயனளிக்கவில்லை.
அதன்பின்னர் சிஹல ராவய அமைப்பைச் சேர்ந்த பிக்குகள் அலரி மாளிகைக்கு பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காலி வீதியின் கொள்ளுப்பிட்டிச் சந்தி நேற்று சிலமணி நேரம் மூடப்பட்டது.
எனினும் தொடர்ந்து பதற்றநிலை நீடிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன. பிக்குகளின் மோதலால் வெசாக் கொண்டாட்டங்கள் களையிழந்தன. -uthayan