பெரியதம்பனை ஊடான பிரமாணங்குளம் – மடு பிரதான வீதி நீண்ட நாட்களாக தீரத்தப்படாமையால் மக்கள் போக்குவரத்து செய்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்கவதாக தெரிவித்துள்ளனர்.
பிரமாணங்குளத்தில் இருந்து மடுவுக்கு செல்லும் 20 கிலோமீற்றர் நீளமான இப் பிரதான வீதியினை மடு, பாலம்பிட்டி, தட்சணாமருதமடு, முள்ளிக்குளம், கீரிசுட்டான், சின்ன பண்டிவிரிச்சான், பெரிய பண்டிவிரிச்சான், பெரியதம்பனை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் போக்குவரத்து செய்ய பயன்படுத்துகின்றனர்.
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும்இ தாம் மீள்குடியேறி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் இன்னும் இவ் வீதி புனரமைக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இப் பகுதியில் பாடசாலை இருப்பதால் மாணவர்களும் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதுடன், மாரி காலங்களில் வீதியில் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலை அப் பகுதியில் இல்லாமையால் வவுனியாவுக்கே நோயாளர்களை கொண்டு வரவேண்டி ஏற்படுகிறது. போக்குவரத்து பாதை சீர் இல்லாமையால் நோயாளர்களை கூட கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, தமது பிரதேசத்துக்கான போக்குவரத்து பாதையை புனரமைத்து தருமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.
-வன்னியிலிருந்து நமது செய்தியாளர் வசந்தரூபன்-