ஹீத்ரோ விமான நிலைய ஓடுபாதைகள் அவசரமாக மூடப்பட்டன

heathrow_airport
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று அவசரமாக தரையிறங்கியதை அடுத்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளும் முன்னதாக மூடப்பட்டிருந்தன.

தற்போது தெற்கு- ஓடுபாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வடக்கு- ஓடுபாதை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.

BA762- ஹீத்ரோ- ஆஸ்லோ ( நார்வே) விமானம் ஹீத்ரோவுக்கு மீண்டும் திரும்பியழைக்கப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

விமானம் புறப்பட்டு சற்று நேரத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக இந்த அவசர தரையிறக்கம் நடந்துள்ளது. 75 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்றும் இது தொடர்பில் முழுமையான விசாரணை இடம்பெறும் என்றும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் வெளியிட்டுள்ள அறி்க்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் நேரப்படி, காலை 9 மணியளவில் விமான ஓடுபாதைகள் இரண்டும் அவசரமாக மூடப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவித்தன.

பிரிட்டிஷ் ஏர்வேஸின் ஏர்பஸ்-ஏ319 விமானத்தின் இயந்திரப் பகுதியிலிருந்து ‘கறுப்பு நிற புகை மண்டலம்’ வெளிப்பட்டதாக ஜோன் கோக்லான் என்பவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியதாகவும், ஓடுபாதையிலேயே பயணிகள் அவசர தரையிறக்கத்துக்கான சறுக்குப் பாதை மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘ தீ பற்றியதைக் காணவில்லை’ என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, ஹீத்ரோ விமானநிலையத்தில் விமானமொன்றில் ஏற்பட்டுள்ள தீயை அணைப்பதற்காக விமானநிலைய தீயணைப்புப் படையினருக்கு உதவிக்கொண்டிருப்பதாக லண்டன் தீயணைப்பு படையினரின் ட்வீட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இப்போது தீ கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்று நம்புகிறோம்’ என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

-BBC

Tags: , ,