வடபகுதி இலங்கையால் ஆக்கிரமிக்கப்பட்டு தனிநாடு என்ற மனோபாவத்திலும் அங்குள்ள தமிழ் மக்கள் தமது அடிமைகள் என்ற மமதையிலுமே அரசாங்கம் தனது நடவடிக்கைகளை அங்கு முன்னெடுக்கின்றது என்று ஜே.வி.பி.யின் அரசியல் சபை முக்கியஸ்தரும் எம்.பி.யுமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
வட மாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது. அவர்களுக்கு சம உரிமைகளையும், ஜனநாயகத்தையும் வழங்கி நிர்வாகத்தை பரவலாக்க வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
யுத்தம் முடிந்து 4 வருடங்கள் பூர்த்தியடையப் போகின்றது. ஆனால் இன்றுவரை தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எதுவிதமான திட்டங்களையும் அரசு முன்னெடுக்கவில்லை. மாறாக, இனங்களிடையே குரோதத்தை ஏற்படுத்தும் வகையிலான திட்டங்களையே முன்னெடுக்கின்றது.
வடபகுதி மக்களுக்கு இன்றுவரை உரிமைகள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு சுதந்திரம் இல்லை. ஜனநாயகம் வழங்கப்படவில்லை. அங்கு இடம்பெறும் மரண வீடாகட்டும், திருமண வைபவமாகட்டும், பிறந்த நாள் வைபவமாகட்டும் அனைத்து விடயங்களிலும் இராணுவத்தினரினதும், உளவுப் பிரிவினரதும் பிரசன்னம் அதிகரித்துள்ளது.
முழுமையாக சிவில் நிர்வாகம் பறிக்கப்பட்டு அடக்கு முறை கோலோச்சியுள்ளது.
வடக்கில் காணாமல் போனோர் தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் தகவல்களை வெளியிடவில்லை. இறந்தவர்கள் தொடர்பிலும் இதே நிலைமை தான் நிலவுகிறது.
வடபகுதி தமிழ் இளைஞர்கள் பெரும்பாலானோரை அரசாங்கம் சிறைகளில் பல வருடங்களாக தடுத்து வைத்துள்ளது. இவர்கள் தொடர்பில் எதுவிதமான குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்காது நீதிமன்றம் முன்நிறுத்தாது விடுதலை செய்யாதுள்ளது.
ஆனால் பிரபாகரன் இறந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவரென பிரகடனப்படுத்தப்பட்ட கே.பி.யை அரசாங்கம் செல்லப்பிள்ளையாக பராமரிக்கின்றது.
வடக்கில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பரம்பரை வாழ்விடங்களை அடையாளம் கண்டு அம் மக்களை அங்கு குடியேற்றிய பின்னரே பாதுகாப்பு மற்றும் வேறு தேவைகளுக்கான காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தியிருக்க வேண்டும்.
இதனால் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்து பிரிவினைவாதத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
வட மாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது. மாறாக கொழும்பிலிருந்து அதிகாரத்தை பயன்படுத்தி வடபகுதி மக்களை அடிமைகளாக அடக்குமுறைக்குள்ளாக்கும் அரசின் நடவடிக்கைகள் வட மாகாண சபை தேர்தல் மூலம் அதிகாரத்தை பரவலாக்கி நேரடியாக யாழ்ப்பாணத்திலிருந்து அம் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கவே இத் தேர்தல் வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.