டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே ஜாலியா இருக்கணும்னு ஆசையா? ஆசை மட்டும் இருந்தா பத்தாது, அதுக்கு நாம சில விஷயங்களை செய்யணும். உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள்.
தவறு செய்வது மனித இயல்பு. போன முறை அவன் தவறு செய்யும் போது மன்னித்தேன், இனி என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் மனம் பண்படையும். அதுமட்டுமல்லாமல் உங்களால் நிம்மதியாகவும் இருக்க முடியும். இதற்கு மருத்துவ ரீதியாகவும் நல்ல பலன் உண்டு.
மறப்போம் மன்னிப்போம் என்பதை தாரக மந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் மன்னிக்க முடியாமல் இருக்கும் அவரைப் பார்த்த உடனே அவர் மீது கோபம் வந்து அந்த கோபம் டென்ஷனாக மாறி ரத்த அழுத்தம் அதிகமாக உயரும். இந்த ரத்த கொதிப்பு உங்களுக்கு பலவிதமான நோய்களை ஏற்படுத்தும்.
இதனால் நம் ஆரோக்கியம் தான் பாதிக்கிறது. அதேபோல், நீங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்காதீர்கள். தெரிந்தோ, தெரியாமலோ பல வகைகளில் நாம் தவறு செய்கிறோம் அப்படி செய்யும் போது அவரிடம் மன்னிப்புக் கேட்கத் தயங்காதீர்கள்.
வயது வித்தியாசம் பார்க்காமல் உங்கள் தவறை மட்டும் மனதில் நினைத்து மன்னிப்புக் கேளுங்கள். அப்படி கேட்கும் போது உங்கள் எதிரி நிச்சயம் பெருந்தன்மையாக நடந்து கொள்வார்.அப்படி அவர் உங்களை மன்னிக்க வில்லை என்றாலும் கவலைப்படாதீர்கள்.
உங்கள் மனதை தெளிவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட போதே நீங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதாக உள்ளூர நம்புங்கள். இதனால் மன அமைதி கிடைக்கும். அப்படின்னா இனிமே நோ டென்ஷன்! வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க! வாழ்க்கை வாழ்வதற்கே!





