8 ஆண்டுகளுக்குப் பின்னர் சிவராம் கொலை வழக்கில் சாட்சியம்

sivaram
ஊடகவியலாளர் சிவராமின் படுகொலை வழக்கில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று முதற்தடவையாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

2005-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் சடலம் நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டது.

சிவராம் கொலை தொடர்பில் புளொட் இயக்கத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தராஜா என்ற சந்தேகநபருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஊடகவியலாளர் குசல் பெரேரா நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

தர்மரத்தினம் சிவராம் கடத்திச்செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாக குசல் பெரேரா தெரிவித்தார்.

கறுப்பு நிற பஜிரோ வாகனத்தில் வந்தவர்கள் அவரைக் கடத்திச் சென்றதாகவும் அவர்களை அடையாளம் காணமுடியாமல் போனதாகவும் சாட்சியாளர் குசல் பெரேரா கூறினார்.

அந்த சந்தர்ப்பத்தில் தான் மது அருந்தியிருந்தபடியால் அருகிலிருந்த பம்பலபிட்டி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்யத் தயங்கியதாகவும் அரச சட்டத்தரணியின் குறுக்கு கேள்விக்கு பதிலளித்தபோது அவர் தெரிவித்தார்.

சிவராம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டதாகவும் அவர் புலிகளுக்கு ஆதரவானவர் என்று கூறமுடியாது என்றும் குசல் கூறினார்.

வழக்கின் மேலதிக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதான சந்தேகநபர் ஸ்ரீஸ்கந்தராஜா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: ,