கச்சத்தீவை கோரும் உரிமை தமிழக அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கச்சத்தீவை மீட்பது தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 1974ம் ஆண்டு இலங்கைக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கை ஒன்றின் மூலம் கச்சாத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
கச்சத்தீவை மீட்டெடுப்பது தொடர்பில் அண்மையில் தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
எனினும், ஜெயலலிதாவின் கோரிக்கையானது அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டத என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு நாடுகளினதும் மீனவர்களது வாழ்வாதாரப் பிரச்சினையாக இதனைக் கருத வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தப் பிரச்சினையை அரசியல் மயப்படுத்தக் கூடாது என தமிழக முதல்வர் ஜெயலிதாவிடம், அமைச்சர் தேவானந்தா கோரியுள்ளார்.
-GTN