ஆள்கடத்தலை முறியடிக்க பிராந்திய நாடுகள் இடையே புலனாய்வு தகவல் பரிமாற்றம் அவசியம் என்கிறார் கோத்தபாய

tamil-news-Gotabaya
ஆள்கடத்தலை முறியடிப்பதற்கு பிராந்திய நாடுகள் ஒன்றுபட்டுச் செயற்பட முன் வரவேண்டும். இவ்வாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பயங்கரவாத முறியடிப்பு மற்றும் நாடு கடந்த குற்றச்செயல்கள் தொடர்பில் ஆராயும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பமானது.

இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
வங்காள விரிகுடா பிராந்தியத்திலுள்ள நாடுகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துவதில் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு கூட்டு உறவினை தமக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும்.

தமது நாடுகளின் புலனாய்வுத்துறையை பலப்படுத்துவதுடன் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு கூட்டுறவினை பிராந்திய நாடுகள் மேற்கொள்வதன் மூலம் தமக்கிடையிலான இலக்குகளை எட்டுவதில் வெற்றியடைய முடியும். இலங்கை அதனை அனுபவரீதியில் தெரிந்து வைத்துள்ளது.

மூன்று தசாப்தங்களாக பயங்கரவாத நடவடிக்கைகளால் இலங்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும் நான்கு வருடங்களுக்கு முன் அதனை நாம் வெற்றிகரமாக முறியடித்தோம். அத்துடன் போதை வஸ்து கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளையும் இலங்கை அடிக்கடி சந்தித்து வந்துள்ளது.

இலங்கை மட்டுமின்றி வங்காள விரிகுடா பிராந்தியத்திலுள்ள பல நாடுகளும் இந்தப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளன.

பயங்கரவாத அச்சுறுத்தல், பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்தல், சட்டவிரோத குடியேற்றம், போதைவஸ்து கடத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த பிராந்திய நாடுகள் காலத்துக்கு காலம் முகம் கொடுக்கும் வகையிலும் செயற்பட வேண்டியுள்ளன.

அவ்வாறு செயற்படுவதற்கு இந்த நாடுகளுக்கு இருக்க வேண்டிய மிகவும் முக்கியமான ஒன்று புலனாய்வாகும். புலனாய்வு சீராக இருப்பதற்கு பிராந்திய நாடுகளுக்கிடையே தகவல் பரிமாற்றம் அவசியமாகும்.

எமது பிராந்தியத்தில் மோசமாகிவரும் ஒரு பிரச்சினை ஆள்கடத்தல் நடவடிக்கையாகும். பொருளாதாரக் காரணங்களை முன்வைத்து தமது பிறந்த நாட்டிலிருந்து ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா ஆகிய அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கு மக்கள் சட்டவிரோதமாக செல்ல முனைகின்றனர்.

அவர்களை மேற்கூறிய நாடுகளுக்கு கொண்டு செல்வது ஆட்கடத்தலில் ஈடுபடுபவருக்கு மிகவும் இலாபம் தரும் ஒரு வர்த்தக வியாபாரமாகும். இவ்வாறு, ஆள்கடத்தலில் ஈடுபடுவோர் சர்வதேச பயங்கரவாதம், போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளனர்.

வேறு நாடுகளுக்கு இவ்வாறு சட்டவிரோதமாக செல்ல முனைபவர்கள் தமது சொத்துக்களை அடமானம் வைக்கின்றனர். சில சமயங்களில் தமது முழுச் சொத்துக்களையும் கடத்தல்காரர்களிடம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என்றார்.

Tags: