தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் 15 வருடங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் “லயன் எயார் – அன்டனோவ் 24” ரக விமானத்தின் நொறுங்கிய பகுதிகளில் சில இன்று மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
நேற்று இரணைமடுக் கடற்பகுதியில் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இந்நிலையில், வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து இந்த விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் குறித்த கடற்பிரதேசத்துக்குச் சென்ற பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொலிஸ் அத்தியட்சகர் அசங்க கரவிட்ட, பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக சிறிவர்தன உள்ளிட்ட பொலிஸ் மற்றும் முப்படையைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டவர்கள் மேற்படி விமானத்தின் பாகங்களை மீட்டனர்.
விமானத்தின் என்ஜின், மோட்டர் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள் சில இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படைக்குச் சொந்தமாக கப்பலொன்றின் உதவியுடன் இந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த விமானத்தின் பாகங்கள் கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பிரதேசத்தில் இருப்பதால் அவற்றை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேற்குறிப்பிட்ட சில பாகங்களை மாத்திரமே தற்போதைக்கு மீட்க முடிந்ததாகவும் கடற்படையினர் அறிவித்தனர்.
இந்த விமானத்தின் பாகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை கரைக்கு எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள், நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், அரசாங்க பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஷ்ட சட்டத்தரணிகள், அரசாங்க அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஆகியோரே விமானத்தில் பாகங்கள் விழுந்து கிடப்பதாகத் தெரிவிக்கப்படும் பகுதிக்கு சென்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் எம்.வை.மஹப்தீன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
கடந்த 1998 செப்டம்பர் மாதம் 29ம் திகதி 48 பயணிகளுடனும் 8 விமான சிப்பந்திகளுடனும் பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கிப் பயணித்த லயன் எயார் விமானம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் வீழ்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.