புகுந்த வீட்டில் மாமனாரின் அரவணைப்பு

happy-family
மாமனார் இல்லாத புகுந்த வீடு, பெரும்பாலும் பாதுகாப்பு இல்லாத வீடாக கருதப்படுகிறது. புதிதாக வாழ வரும் ஒரு மருமகளுக்கு, மாமியாரிடமிருந்து தாயின் நேசம் கிடைக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக மாமனாரிடம் இருந்து ஒரு தந்தையின் நேசம் கிடைக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.

பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குள் நுழையும் ஒரு பெண்ணின் மனநிலையை மாமனாரால் புரிந்து கொள்ள முடியும். குடும்பத்தை பராமரிப்பது, கணவருக்கு சேவை செய்வது ஆகியவைதான் பெண்களின் கடமை என்று இப்போதும் நினைக்கிறார்கள். கடமைகளை மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து வாழும் பெண்களுக்கு தங்களுடைய ஆசைகள், லட்சியங்களைப் பற்றி கனவு காணக்கூட உரிமையில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது.

அப்படிப்பட்ட பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக குரல் கொடுக்க ஒரு ஜீவன் தேவை. எப்போதும் மகனது தேவைகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் அம்மாக்களுக்கு மருமகளின் கனவுகள், உரிமைகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இந்த நிலையில் மாமனார் இல்லாத வீடு பெண்களுக்கு ஒரு குறையுள்ள வீடுதான்.

தவறு செய்யும் நேரத்தில் காப்பாற்ற அக்கறைகொண்ட ஒருவரின் பாதுகாப்பும், பரிந்து பேசவும், அவள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறவும், அறிவு முதிர்ச்சியும், அனுபவமும் உள்ள ஒரு நபர் தேவை. இந்த முக்கிய இடத்தை நிரப்புவது மாமனார்தான். மகன்- மருமகள் இடையில் ஏற்படும் சிறு பூசல்களுக்கும், மனஸ்தாபங்களுக்கும் மாமனார் தான் மருந்தாக இருப்பார்.

மகனை கண்டிக்கும் சக்தி மாமனாரைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்? கணவன்-மனைவிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பக்குவமாக களைய அனுபவ முதிர்ச்சி தேவை. மருமகள் மீது குறையிருந்தாலும் வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து இருவரையும் சேர்த்து வைக்கும் பணியை மாமனாரால் மட்டுமே செய்ய முடியும்.

மாமியாருக்கும்- மருமகளுக்கும் இடையே ஏற்படும் தகராறுகளை சரிசெய்யவும் மாமனாரால் தான் முடியும். தனது மனைவியை அடக்கும் தைரியம் அவரிடம் மட்டுந்தானே இருக்க முடியும்! ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் மாமனார் பெரும் பங்கு வகிக்கிறார்.

குடும்பத்தில் புதிதாய் பிரவேசிக்கும் ஒரு பெண்ணை மற்றவர்கள் புரிந்து கொண்டு நேசிக்கும் மனப்பக்குவம் வரும்வரை அந்தப் பெண்ணை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மாமனாருடையது. மாமனார் இல்லாத பல குடும்பங்களில் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக உணர்கிறார்கள்.

Tags: ,