பார்வையற்றோர் படிக்க உதவும் பிரைய்லி முறையை பயன்படுத்தி இதுவரை ஹிந்தி, மராத்தி மொழிப் பத்திரிகைகளும், ஆடியோ வடிவிலான புத்தகங்கள் மற்றும் பாடநூல் புத்தகங்களுமே இந்தியாவில் வெளிவந்துள்ளன.
முதன்முதலாக, ‘ஒயிட் பிரிண்ட்’ என்ற பெயரில் பார்வையற்றோருக்கான ஒரு ஆங்கில மாத இதழ் அடுத்த மாதம் முதல் மும்பையிலிருந்து வெளிவர இருக்கின்றது. இது மற்ற பத்திரிகைகளைப் போன்றே, அரசியல், நாட்டு நடப்பு, உணவு, பயணக்குறிப்புகள் போன்ற சகல விஷயங்களும் அடங்கியதாக இருக்கும்.
பொதுஜனத் தொடர்பாளராகப் பணியாற்றி வந்த. 24 வயதே ஆன உபாசனா மகதி என்பவர் இந்த புது முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வியாபார நிறுவனங்கள் மூலம் விளம்பரங்களையும் பிரபல செய்தியாளர்களின் மூலம் பிற செய்திகளையும் பெற்று மும்பையின் வொர்லி பகுதியில் உள்ள பார்வையற்றோருக்கான தேசியக் கழகத்தின் உதவியுடன் இந்த இதழ் அச்சிடப்படுகின்றது.
தேசியக் கழகத்தில் உள்ள ஆங்கிலத்தை பிரைய்லி முறையில் மொழியாக்கம் செய்யும் மென்பொருள் உதவியுடன், தான் இதில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கெனத் தனி எழுத்தாளர்களோ, மொழிபெயர்ப்பாளர்களோ தற்போது இல்லை என்றும் மகதி கூறினார். மேலும் பார்வையற்றோருக்கான இந்த இதழ் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மானிய விலையில் கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.