முதலை கடியிலிருந்து தப்பிய பிரஞ்ச் மீனவர் – உலகம் உங்கள் கையில்

Tamil-Daily-News-world
முதலை கடியிலிருந்து தப்பிய பிரஞ்ச் மீனவர்

டார்வின்: தலையை முதலை கவ்விய நிலையிலும் அதனிடமிருந்து தப்பியுள்ளார் பிரஞ்ச் மீனவர் ஒருவர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மீனவர் யோன் காலரின் (29). இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.

இவர் தனது மீன்பிடி படகிலிருந்து இறங்கி கடற்கரையிலிருந்து 15 மீட்டர் தொலைவில் நீந்திக் கொண்டிருந்தார். அப்போது இரண்டரை மீட்டர் நீளம் உள்ள உப்பு நீர் முதலை அவரது தலை, கழுத்துப் பகுதியை கவ்விப் பிடித்து உள்ளே இழுக்க முயற்சி செய்தது. காலரின் கடுமையாக போராடி முதலையிடமிருந்து தப்பினார். ஆனாலும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு நுலுன்பை நகரில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஹெலிகாப்டரிலிருந்த 9 பேரை சிறை பிடித்தனர் தலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டரில் இருந்த 9 பேர் தலிபான் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டனர். கொராசன் சரக்கு விமான போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணத்தில் அஸ்ரா என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அவசரமாக தரையிறங்கியது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள அஸ்ரா, தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும்.

அந்த ஹெலிகாப்டரில் பொறியாளர்கள், பைலட்கள் என மொத்தம் 9 பேர் இருந்தனர். அவர்கள் தலிபான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர். ஹெலிகாப்டர் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதா அல்லது தலிபான்கள் தரையிறங்கச் செய்தனரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இந்நிலையில் ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர்கள் அனைவரும் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதை உறுதி செய்யுமாறு ஆப்கன் அதிகாரிகளை, துருக்கி வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆப்கனில் மலைப்பாங்கான பகுதிகளில் இதுபோல விமானங்கள் அவசரமாக தரையிறங்குவது அடிக்கடி நிகழ்கிறது. 2011ம் ஆண்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டரிலிருந்த 30 அமெரிக்க, 7 ஆப்கன் வீரர்களும், ஒரு மொழிபெயர்பாளரும் இறந்தனர்.

நைஜீரியா சண்டையில் 185 பேர் பலி

அபுஜா: நைஜீரியாவில் ராணுவத்துக்கும் போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 185 பேர் இறந்தனர். எண்ணெய் வளமிக்க மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் என்ற முஸ்லிம் தீவிரவாத இயக்கத்தினர் கடந்த 4 ஆண்டுகளாக அவ்வப்போது ராணுவம் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போர்னோ மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் இயந்திர துப்பாக்கியால் சுட்டனர்.

ராணுவத்தினர் எதிர்தாக்குதல் நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் அப்பாவி மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர். திடீரென அவர்கள் ராக்கெட்கள் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தினர். இந்த மோதல் பல மணி நேரம் நீடித்தது. இதில் இருதரப்பிலும், பொதுமக்கள் என 185 பேர் இறந்தனர்.

வங்கதேச ஜனாதிபதியாக அப்துல் அமீது தேர்வு

டாக்கா: வங்கதேசத்தின் 20வது ஜனாதிபதியாக பழம்பெரும் அரசியல்வாதியும், நாடாளுமன்ற சபாநாயகருமான அப்துல் அமீது (69) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருப்பார். வங்கதேச ஜனாதிபதியாக இருந்த ஜில்லூர் ரஹ்மான் கடந்த மார்ச் 20ம் தேதி சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தார். இதனையடுத்து அவாமி லீக் கட்சி சார்பில் அப்துல் அமீது அடுத்த குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அப்துல் அமீதை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக வங்கதேச தேர்தல் ஆணையாளர் காஜி ரக்கிபுதின் அஹ்மத் நேற்று அறிவித்தார். பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருக்கிய சகாவாக திகழும் அப்துல் அமீது 54 ஆண்டுகளாக பொது வாழ்வில் உள்ளார்.

-dinakaran

Tags: ,