பிரபல வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் உடல் நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமையன்று இரவு சென்னையில் காலமானார்.
திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் பிரபல வயலின் வித்வான் ஜெயராமன் (82). குடும்பத்துடன் சென்னை தியாகராயநகர், ராமானுஜம் சாலையில் வசித்து வந்த லால்குடி ஜெயராமன், கடந்த சில மாதங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக சிகிச்சையும் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமையன்று இரவு மரணம் அடைந்தார்.அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற உள்ளது.
ஜெயராமன் மகன் ஜி.ஜே.ஆர்.கிருஷ்ணன், மகள் ஜி.ஜே.ஆர் விஜயலட்சுமி ஆகிய இருவரும் வயலின் வித்வான்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா இரங்கல்
லால்குடி ஜெயராமன் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனfர்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,” இசைத்துறையில் எட்ட முடியாத சாதனைகளை தொட்ட பிரபல வயலின் மேதையும், சிறந்த ஓவியரும், இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.இசைக்குடும்பத்தில் பிறந்து, மனதை கரைக்கும் உன்னத இசைக்கு சொந்தக்காரரான லால்குடி ஜெயராமன் இசையின் பல பரிமாணங்களை இந்த உலகிற்கு உணர்த்தியவர். இசை மாமேதைகளான ஜி.என்.பி., செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் கச்சேரிகளை தனது வயலினால் அழகுபடுத்தியவர் லால்குடி ஜெயராமன். தனிக் கச்சேரிகள் நடத்தி இசை ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். தன்னுடைய வயலின் மூலம் வார்த்தைகளை ஒலிக்கச் செய்தவர்.
லால்குடி ஜெயராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.